கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

அறைகளின் வெளியே...!



வீதியில் இருந்து
அன்னியப்பட்டிருந்தது
அந்த அறை நம்மை இணைத்த
நம் வீட்டைப்போல்!

பழகிய சாலை
பார்த்த முகங்கள்
அடையாளங்களை வைத்தே
அடைந்துவிடுகிறோம் சுலபமாய்....!
ஆணியில் தொங்கும்
சட்டைப்பை உள்ளிருக்கும்
சில்லரைப்போல்
சும்மா இருந்துவிடுகிறோம்
அவசியமில்லாத நேரங்களில்!

பந்துப்பட்டு
உடையாத கண்ணாடி ஜன்னல்
அழைப்புமணியோ கதவுத்தட்டலோ
கேட்காத அறை
எறும்புகள் பார்க்காத
விஷேச தின கோலம்
குழந்தைகள் கிறுக்காத சுவர்கள்
-எதோ ஒன்றில்
உட்கார்ந்திருக்கும் நம் தாம்பத்தியம்!

மின்விசிறியின்
புழுக்கம் தாளாமல்
கதவுக்கு வெளியே காத்திருக்கலாம்
சில கவிதைகளும்
சில கனவுகளும்
குடை இல்லாமல்
மழையில் நனைந்தபடி!

நிறவொவ்வாமை...!


துடைக்க மறந்து
வெளிறிப்போன
பவுடர்பூச்சு!

நாணய அளவுகளைத் தாண்டும்
நெற்றி கன்னம்
நிறைத்தபோட்டு
நிற வொவ்வாமையில்!

பின்னிய கூந்தல்
அகல்விளக்காய்....
தனித்திருக்கும் கார்த்திகையில்!

கூரை ஏறிய
பூசணிக்கொடியில்
தென்பட்டு மறையும்
செங்கல் சூளை.....

அப்பாவின் சட்டை
அம்மாவின் புடவை
மாறிய வடிவங்களில்....!

அரிக்கேன் விளக்காய்
செம்மண் சாலைகளில்
எப்போதாவது நிற்கும் பேருந்துகள்!

அமாவாசை பகல்பொழுதுகளில்
மின்மினி பொறுக்கும்
மரப்பாச்சி பொம்மைகள்!

எத்தனை எறும்புகள்
செத்ததோ
யாருக்குத் தெரியும்
சீனி டப்பாவின் பக்கத்தில்!


ரூபாய்க்கு மூணு...!



அதன் இருப்பு
கல்யாணப்புடவை என்றானதில்
என்னைவிட
அம்மாவிற்கே மகிழ்ச்சி அதிகம்!

வாழ்வின் மிச்சத்தை
இரும்புப் பெட்டிக்குள்
ஒளித்து வைத்திருக்கும்
தீபத்தில் எண்ணெய் வார்த்தது அது!

கசங்கிய பொழுதுகளை
முந்தாணையில் தேடும்
அக்காவைப்போலில்லை
செல்லப்பூனையின்
தலைக்கோதும்
கைரேகை செத்துப்போயிருக்கும்
அவளின்கரத்தில்
ஒவ்வொருத்தொடுதலும்
பூப்பூக்கவைக்கும் அதிசயம் ரசிப்பேன்!

கண்ணாடி நனைத்து
வழுக்கும் மழையாகவே
மாட்டிவைக்க பிரியம் காட்டாத
அவளின் ஞாபகம்!!
திடீரென முளைத்த
ஒரு திருநாளில்
கட்டாயத்தின் பேரில்
அப்பாவுடன் அது நிகழ்ந்ததாய்
கொஞ்சம் வெட்க்கத்தோடுசொல்லிக்கொள்வாள்....
சமீபத்து மழையில்
நனைந்திருந்த புடவையில்
கரைந்திருந்தது அது!

"ரூபாய்க்கு மூணு"
காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது
அந்த புகைப்படக்காரனின் குரல்.....
இதுவரை அடையாளம் இழக்காத
அவளின் ஞாபகமுட்டை
குஞ்சுப் போரித்ததே இல்லை
-நேற்றுவரை!

உயரம்-2


சிறுவயதில்
மொட்டைமாடி
கலங்கரை விளக்கக்கோபுரம்
ராட்சத ராட்டினம்.....

உயங்களின் விளிம்பு
தொடுகிரபோதெல்லாம்
பயத்தில் அலறிவிடுவேனாம்..
-அம்மாச் சொல்ல கேள்வி!

மனைவி சொல்கிறாள்
நேரம் கிடைக்கிறபோதெல்லாம்-
மற்றவர்கள் அலறுவதை
கீழிருந்து ரசித்தபடியே
என் உயரத்தை
உயர்திக்கொண்டிருகிறேனாம்......

யாருக்குத்தெரியும்
குறுக்கெழுத்துப் போட்டிக்கு
இடமும் வலமும் நிரப்பி விட்டால்
மேலிருந்து கீழ் சுலபம் என்று!

பழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார் மரணம்!



அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

அஞ்சலி:

கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி:தட்ஸ்தமிழ்.காம்

வன்முறைகளும் வரைமுறைகளும்!



பொதுவா எல்லோருக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிக்கொண்டு இருக்கும்;இருக்கலாம்...ஆனால் பலபேர் பலவிதமாக எழுப்பவோ, உசுப்பிவிடவோ எத்தனிப்பது கிடையாது. ஆனால் நேற்று நடந்த சம்பவம் "சென்னையா இது" என்று கேள்விக் கேட்கவைத்தது என்பதை வெட்க்கத்தோடு சொல்லித்தான் ஆகவேண்டும்....

தூங்கும் மிருகத்தை விழிக்க வைத்த விபரீதத்தை என்ன சொல்ல?
மாணவர்களுக்குள் சண்டைகள், சச்சரவுகள் எல்லாம், எல்லா காலங்களிலும் இருந்துகொண்டு வரும் ஒன்றாக இருந்தாலும் இதுவரை எந்த ஊடகத்திலும் இதுபோன்றதொரு வன்முறையை பார்த்திருக்கமாட்டோம்.

சட்டம் ஒழுங்கு காக்க படிக்கிற சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டக்கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இப்படி காட்டுமிராண்டித் தனமாக நடந்துக்கொண்டது பொதுவாக எல்லா மாணவர்களையும் வருத்த்திர்க்குள்ளாக்கி இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

ஏன் இந்த வன்முறை எதற்காக இப்படி ஒரு அராஜகம்.ஒருகணம் யோசித்தால் இந்த விபரீதத்தின் உண்மை தெரியலாம்!

என்னதான் வாசலுக்கு வெளியே பாதுகாப்பு என்கிற பெயரில் காவல்துறை நின்றுகொண்டு இருந்தாலும் கண்ணெதிரே ஒரு வன்முறை நடந்து இருக்க பத்தடி தூரம் இல்லை அதை நிறுத்த முடியாதா என்கிற பாவமான கேள்வியை பாமரத்தனமாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது.

தொலைக்காட்சியில் இந்த பதிவை பார்த்த பலருக்கு உண்மையில் மனம் வலித்திருக்கும். என்னதான் அரசியல் ஆதாயம் இல்லை வேறு உள்நோக்கம் என்கிற பேச்செல்லாம் பேசப்பட்டாலும் கூட நடந்தது உண்மையில்லை என்று மறுக்க முடியாது.

தீவிரவாதிகள், தீவிரவாதம் இப்படி பேசிப்பேசியே மிதவாதிகளைக்கூட தீவிரவாதிகளாக்கிவிட்டு கொண்டிருக்கிறோம் என்கிற கேள்விக்கூட எழுவதுண்டு.என்ன பேசி என்ன இரண்டு உயிர்....

பொதுவாக தப்பேக்கூட செய்திருந்தாலும் இப்படியா ஓட ஓட விரட்டி அடித்து குமுறும் அட்டூழியம் .....இந்த கலாச்சாரம் உண்டாக யார் காரணம்?நீங்கள், நான், ஏன் நம்மை சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகளாக மாறியிருக்கிறோம்.

வன்முறையை கட்டவிழ்க்கும் இந்த காட்டுமிராண்டிக் கலாச்சாரம் பரவாமல் தடுக்க நாம் தான் முனையவேண்டும் . வரைமுறையில்லாமல் வந்துபோகும் இதுபோன்ற சம்பவங்கள் வாழும் சந்தர்ப்பங்களை வழுக்கி விழவைக்கும் தருணங்களாகவே அமைந்துவிடுகின்றன என்பதை சொல்லிக்கொள்ள வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

எதையும் இரண்டுமுறை யோசித்து, மூன்றுமுறை ஆலோசித்து, ஒருமுறை முயலும் எந்த விசயமும் மாறிப்போய்விட்டதா என்று அஞ்சவைக்கிறது.
குற்றவாளிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறதா கல்லூரிச்சாலைகள்?குற்றங்களை தெரிந்துகொள்ளத்தான் வகுப்பறைக்குள் நுழைகிறதா இன்றைய மாணவ சமுதாயம்?
வன்முறைகளை விசாரிப்பதிலும், வரைமுறைப்படுத்துவதிலும் ஓய்வெடுத்துக் கொள்கின்றனவா முதுகெலும்பு இல்லாத பேனாக்கள்????

"சட்டக்கல்லூரிக்குள் வன்முறை" - தலைப்பு செய்தியாக்கிவிடும் பத்திரிகைகளின் நான்காம் பக்க நமத்து போன செய்திகளில் காபியோ டீயோ உறுஞ்சிக் கொண்டிருக்கும் இன்றைய பொழுதின் முகத்தில் ஆசிட் அடிக்க கடவது........

பி.கு: கசங்கிய காகிதமாய் அடிப்பட்ட அந்த இளைஞனை ஆட்டோவில் ஏற்றியது மிக மிக கொடுமை.....ஏன் ஆம்புலன்சை அழைக்க அந்த நேரத்தில் அவகாசம் இல்லையா......முதல் உதவி எல்லாம் இரண்டாம் உதவி ஆகிபோய்விட்டதா??????

"டேய் அங்கிள் வந்திருக்கார்டா ..."


பொதுவா எல்லோருக்குள்ளும் ஒரு பலவீனம் இருக்கும். என் பார்வையில் அது பலவீனம்னாலும் சிலபேருடைய பார்வையிலே அது பலம்னு கூட சொல்லிக்கலாம்.


எது பலம்?எது பலவீனம் எது?ங்கிறத லியோனியோ சாலமன் பாப்பையாவையோ கூப்பிட்டு பட்டிமன்றம் போடுற அளவிற்கு பட்ஜெட் பத்தல அதான் இருக்கவே இருக்கு நம்ம பிளாக் எழுத்திட்டேன்.


உங்க வீட்டுல பிள்ளைகள் இருக்காங்களா?........அப்படின்னா உங்களுக்கு நிச்சயம் இது பலவீனமாகக் கூட இருக்கலாம். என்ன ஒருமாதிரி போகுது பார்வை!!!!!!!!!!உண்மையத்தானே சொல்றேன். யாரோ வீட்டுக்கு வராங்க....விடுங்க நானே வரேன்னு வச்சுக்குங்க வழக்கம் போல டீயோ காப்பியோ சம்பிரதாய விருந்தோம்பலோட ஆரம்பிப்போம். நீங்களோ இல்லை உங்கள் மனைவியோ ஆரம்பிக்கலாம்.


உங்கள் வீட்டு செல்லத்தை பாவம் கூப்பிடுவீங்க. பரிதாபமாய் வந்து நிற்கும் உங்க சுட்டிகளை கடமைக்கு என் முன்னாடி நிப்பாட்டுவீங்க.....அது ஒரு மாதிரி என்னை பார்த்து முழிக்கும். நீங்க உடனே இப்படி ஆரம்பிப்பீங்க.....


"செல்லம் மாமாவுக்கு கத்தாழ கண்ணால ஆடிக்காட்டு..."எந்தவிதமான சங்கோஜமும் இல்லாமல் இடுப்பை அப்படியும் இப்படியும் ஆட்டியபடி ஆடும் உங்கள் சுட்டி.


இது முதல்முறையா என்ன அதுக்கு? பலமுறை வீட்டுக்கு பலபேர் வருகின்றனர். ஒவ்வொருவரிடமும் இப்படித்தானே ஆடிக்காட்ட வேண்டியிருக்கிறது.


"உங்களுக்கு தெரியுமா என்னமா ஜோக் அடிப்பான் தெரியுமா? மாமாவுக்கு அந்த லவ் ஜோக் சொல்லுமா"
ஏதோ இரட்டை அர்த்தத்தில் ஜோக் என்பதாக உங்கள் செல்லங்கள் சொல்ல நீங்களே பெரிதாக சிரித்தும் வைப்பீர்கள்.தர்மசங்கடத்துடன் நெளிய வேண்டி நான் நிமிர்ந்தாலோ "என்ன சார் சூப்பரா பண்றா இல்ல"என்பதாக என்னால் வழங்கப்படும் சர்டிபிகேட்டுக்காக காத்திருப்பீர்கள்.


ஒவ்வொரு வீட்டிலும் இதே நிலைமைதான். அந்நியர் யார் வந்தாலும் உங்கள் வீட்டுக் குழந்தைகளின் கச்சேரிகள் எந்த முன்னறிவிப்புமின்றி அரங்கேற்றிவிடுவீர்கள்.


அதில் என்னவோ அப்படியொரு அலாதி ஆனந்தத்துடன் செயல்படும் பெற்றோர்களை நடுவெயிலில் வெளியே முட்டிப்போட வைக்கலாமா இல்லை வீட்டுப்பாட நோட்டில் இம்போசிசன் எழுத வைக்கலாமா என்று பிள்ளைகள் யோசிப்பதாக ஒரு தகவல்.


இதாவது பரவாயில்லை. சிலப்பேர் தன்னையே பிரதானப்படுத்தி பேசுவதுதான் கொடுமை....


"சார் இது நான் எழுதின ஜோக் போனவாரம் தான் இத புக்குல வந்திருக்கு"
"இது நான் போட்ட கோலம் "
-எத்தனை புள்ளி கேட்ட்காவிட்டால் அவ்வளவுதான். எதோ சுனாமியில் சிக்கிக்கொண்டதுப்போல் முகம் அநியாயத்திற்கு ஒரு மாதிரியாய் மாறிப்போய்விடும்.


எனக்கு பல எழுத்தாளர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். இல்லை இப்படியும் சொல்லலாம் பல நண்பர்கள் எழுத்தாளர்களாக இருக்கின்றனர். எப்போதாவது அவர்கள் வீட்டிற்கு செல்கிறபோது தங்களின் செயல்களை பட்டியலிடுவது ஒரு பெரிய காரியமாகவே செய்வது பாவம்.


சமீபத்தில் ஒரு இசையமைப்பாளர் நண்பரை சந்திக்க அவர் இல்லம் சென்றேன். வழக்கம்போல் காப்பியுடன் வரவேற்றார். அமர்ந்து சிறிது நேரம்போனதும் கம்ப்யுட்டரை ஆன் செய்து ஹெட்செட்டை எடுத்து போட்டுக்கொள்ள சொன்னார். மாட்டிக்கொண்டேன். எதோ ஒன்றை ப்ளே செய்தார். கேட்டேத் தீரவேண்டும் என்பதில் அவரின் பிடிவாதம் தெரிந்தது.


"இது இப்பதான் கம்போஸ் செய்தேன்....எப்படி இருக்கு..."
" இது அந்த படத்துக்கு போட்ட tune .....இதுல ஜாஸ் கொஞ்சம் தூக்கலா இல்ல..."
-இப்படியாக அவர் பேசினார். என் பதில் என்ன என்பதைவிட பெறுவதில் காட்டிய ஆர்வம் அவரின் அடுத்த முயற்ச்சியில் எதை சொல்லலாம் என்பதிலேயே குறியாய் இருந்தது. பலம் என்பதைவிட பலவீனம் என்று சொல்ல முடியவில்லை.....


என் வீட்டு விலாசம் தெரிந்தால்தான் என் வீட்டிற்கு நீங்கள் வரமுடியும். விலாச அட்டையை கொடுக்காத போது எப்படி சாத்தியம்????????


யாராவது இப்படி கேட்டால்.....எப்படியோ இதையும் எழுதி உங்களை வாசிக்க வைக்க முயற்சிக்கும் நானும் அப்படிதானே?


என்ன செய்ய எல்லோருக்குள்ளும் பலமாய் பலவீனங்கள் குடியிருக்கின்றன. இதை யாராச்சும் இன்னொருத்தர்க்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டாலும் ஆச்சர்யமில்லை....


"டேய் அங்கிள் வந்திருக்கார்டா ..." வீட்டிற்கு வந்திருக்கும் உங்களை வரவேற்றபடி மகனை அழைக்கலாம் நான்.
நீங்கள் இன்னொரு தலைப்புடன் உங்கள் ப்ளாகில் எழுத ஆரம்பிக்கலாம் .

தனிமை கொஞ்சம் ஓவராய்...........!

யாராவது கொஞ்சம் கோபமா திட்டிட்டாங்கன்னா இப்பல்லாம் "தனிமையாய் வாழக்கடவாய்" னு சபிக்கணும் போலத்தோனுது.
எல்லோருமே சொல்றமாதிரி தனிமை சுகம் இல்லீங்க நரகம். வேதனை. இன்னும் என்னன்ன வார்த்தைகள் இருக்குமோ அதெல்லாம் போட்டு நீங்க நிரப்பிக்கலாம்.....

எப்பவும் பரபரப்பாவும் கூட்டத்தொடேயும் வாழற இதம் இனிமை தனிமை கொடுக்க தவறிவிடுகிறதுன்னு கொஞ்சம் பெரிசா லெக்ச்சர் பண்ணலாம்.
தண்டவாளம் பக்கத்த்துல வீடு கிடைக்கறப்ப எரிச்சல் அடைகிற உங்களை போல நானும் ஒரு காலத்தில் வேண்டுமானால் இருந்திருப்பேன். ஆனால், இப்பல்லாம் அப்படி இருக்க முடியறதில்ல. ஜன்னல் திறக்க, போற/வர ரயில்களை ரசிக்க முடிகிறது. அதன் தண்டவாள இசைஅமைப்பில்கண்களை மூடி கனவுகளை அழைக்கத் தொடங்கிவிடுகிறேன்னு சொன்னால் அது கொஞ்சம் பலருடைய ஸ்லாங்கில் ஓவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மார்கெட் பகுதிகள், எப்போதுமே கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காத பஸ் ஸ்டாண்ட் இன்னப்பிற இடங்களில் கவிதைகளாகவும், கதைகளாகவும், எழுத்துகளாகவும் எத்தனையோ புதுபுது விஷயங்கள் "என்ன எடுத்துக்கோ என்ன எடுத்துக்கோ"ன்னு வேண்டிக்கிட்டு நிக்கறாப்பல தோணுது. உங்களுக்கு தோணுமா????????
ஆனால் , சில விஷயங்களை தனிமை, கூட்டத்தால் அழிக்கப்பட்டு விடுகிறது.திரைப்பட கனவுகளில் இருக்கிற எனக்கு இந்த தனிமை ஒரு பெரிய சுமைதான்னு சொல்வேன்.
குரூப்புல பாடற பாடகர்கள், பாடகிகள் அதிகம் சந்திக்கிற வாய்ப்பு கிடைப்பதுண்டு.
ஒரு சிறந்த பாடலுக்கு கூட்டத்தில் நடனமாடிய நடனக் கலைஞர்கள் கூட பலர் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர்.
எப்போதாவது கேட்கிற ஒரு பாடல் fm களில் ஒலிக்கிற சந்தர்ப்பங்களில் தன்னுடைய குரல் எது என்று அடையாளப்படுத்த அலைபாய்கிற அவஸ்தை கோரஸ் கலைஞனுக்கு ஒரு வேதனை தான்.
அந்த பத்து பதினைந்து பேர்களில் தன்னை அடையாளம் காணமுயலும் தன் உறவு/நடப்பு சகாக்களை ஆர்வத்துடன் பார்க்கும் அந்த பரிதாபக் கலைஞனின் பார்வைதான் என் தனிமைக் குறித்தான பார்வையும்!!!!!!
இந்த அவஸ்தை உங்களுக்கு நிச்சயம் உண்டாகி இருக்கலாம்....

திரைப்படத்துறையில் மட்டுமில்லை எந்த துறையிலும் கூட்டு முயற்சியில் கடைசியில் தனித்துவமாய் தெரிபவன் கூட்டத்தை தனிமைப்படுத்தி தன்னை பிரபலப் படுத்திகொள்கிறான் எப்போதும்....
தனிமையில் விளைவது அழுகையும் ஒப்பாரியும். கூட்டத்தில் தான் கும்மி அடிக்கமுடியும். கூடவே குட்டுக்களை அன்பாய் பரிமாறிக்கொள்ளமுடியும்.
தனிமை எப்போதுமே நரகம் தான்...

என்னங்க நான் சொல்றது சரிதானே?????????????????????

பென்சில்.......!



காதில்

செருகி வைத்த பென்சில்

கணக்கெழுதும்

மளிகைக்கடை அண்ணாச்சி

நடராஜ் பென்சிலில்

ஆரம்பித்த நட்பு...



பூப்போட்ட

பென்சிலோடும்

ரப்பர் இணைத்த

வாசனை பென்சிலோடும்

வசதி பரிமாறும்

பாலுவின் பென்சில் ஊக்கில்

குத்துப்படும்

எங்கள் பள்ளிக்கூட மரபெஞ்ச்....



"செவன் கிளாக்" பிளேடில்

கூர்சீவும் சந்தர்ப்பங்களில்

விரலில்படும்

ரத்த துளிகளில்

அப்பா வாங்கித்தரும்

"காம்ளின்" பென்சில்

சிவப்பாகிபோவதுண்டு!



பென்சில் ஸ்டாண்ட்

வாங்கி

வரிசையாய் அடுக்கி

படம் வரையும்

ஓவிய பாடவேளையில்

அகப்படாமல் போவதுண்டு

வெள்ளை பென்சிலின்

உபயோகம்

பரிதாபமாய்

பென்சில் ஸ்டாண்டில்....



பென்சில்கள்

எப்போதும்

கிறுக்கிக்கொண்டேதான் இருக்கும்

சீவுகிறபோதும்

எழுதுகிறபோதும்.....



ஆனால்

பென்சில்களைவிட

பேனாக்களே

பலருக்கு பிடித்த ஒன்றாகிவிடுவதுண்டு!



நூல்கட்டி

கையெழுத்துப்போட

நூலகத்தில் கட்டிவைத்திருக்கும்

அந்த பென்சிலை

பார்த்தபோதுதான்

புரிந்துகொள்ள வேண்டயுள்ளது

மாட்டுக்கு மட்டுமல்ல

பென்சிலுக்கும்

மூக்கணாங்கயிறு

அவசியம்தான் போல!

ஒரு காலத்தில் அவளும் தேவதை தான்.......


அவளை இப்படியொரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. எப்படி இது சாத்தியம்....ஒருவேளை அவளை போல யாரோவோ.... அப்படி இருந்தால் முதலில் சந்தோசப்படுவது நானாகத்தான் இருக்கமுடியும். ஆனால் அது அவள் தான் சந்தேகமேயில்லை.......
எங்கள் தெருவின் தேவதை அவள். அவள் குடும்பம் வந்த பிறகுதான் எங்கள் நண்பர்கள் வட்டாரமே கொஞ்சம் தூர் வாரப்பட்டது என்றால் அது பொய்யில்லை. சின்ன வயசு அத்தனை விளையாட்டுத் தனங்களையும் வசீகரித்தவள் அவள்.ரொம்பவே அழகு.....

தங்களை பார்க்கமாட்டாளா என்பதாகவே ஒவ்வொரு குரூப்பும் எதிர்பார்க்க அவள் கொஞ்சம் திமிர் பிடித்தவள் போல் தெரிய ஆரம்பித்ததில் ஆச்சர்யமில்லை.

கல்லூரி சேர்ந்தபோது அவளுக்கு கல்யாணம் ஆனது....அம்மா கூட அவள் திருமணதிற்கு சென்று வந்தாள். அதன் பிறகு படிப்பு வேலை கல்யாணம் இப்படியாக ஓடிவிட்டது வாழ்க்கை. இந்த நிலையில் அவளை இப்படி ஒரு கோலத்தில்.... நினைக்கவே மனம் துடித்தது. நான் கூட அவளை ஒருதலையாய் நேசித்திருக்கிறேன். எப்படி இருந்தவள் ......ஒரு பழைய கசங்கிய காகிதமாக.....மனநிலை சரியில்லையா.....குடும்பத்தினர் யாரும் இல்லையா ????????????

மனைவியை பார்த்தேன். திருமணமாகி பத்தாண்டுகள் ஓடிவிட்டிருந்தாலும் இளமையாகவே தெரிகிறாள். வாழ்க்கை எந்த தேவதையையும், எந்த தேவனையும் விட்டு வைப்பதில்லை போல.
எங்கள் தெரு தேவதைக்காக கொஞ்சம் வேதனை பட மட்டும் தான் முடிந்தது.

“தேசம்”


மலைகளாலும், மரங்களாலும், நதிகளாலும் சூழப்பட்டதல்ல இந்த தேசம்…!

இருட்டுக்கு வெள்ளையடிக்கும் ஒரு பகல்….. கனவுகளுக்கு இமைத்திறக்கும் ஒரு இரவு….. வாழ்வின் கதவுதிறக்கும் ஒரு சந்தோஷம்…..

ஒவ்வொரு திசையிலும் உணர்வுகளால் எழுதப்பட வேண்டிய எத்தனையோ விஷயங்களை மென்மையாய், உண்மையாய் ஒரு தென்றலாய் வீசிப்போகிறதே அந்த இனிமையின் அடையாளம் – நம் தேசம்!

சக்கரம் சுழல்கிறது – ராட்டினம் சுழல்கிறது – பூமி சுழல்கிறது – வித்தியாசங்களை பிரிக்கிற அறிவு – முன்வைக்கிற முதல்கால் “சமத்துவம்.”

மதங்களால் மனிதன் பிணைந்திருந்தாலும் அன்பினால் இணைத்திருக்கிறது நம் தேசம். கண்ணீரின் உப்புக்கரிப்புக்கும், கடல்நீரின் உப்புக்கரிப்புக்கும், வியர்வையின் உப்புக்கரிப்புக்கும் அழகாகவே அடையாளங்கள் தருகிற நம் வரலாறு புள்ளிவிவரங்களால் மட்டுமே அடங்கிவிடுவதில்லை. ரங்கோலியாய் அழகுப்படுத்தி பார்க்க ஆனந்த கூத்தாடுகிறது ஒவ்வொரு முறையும்….

எத்தனை படையெடுப்புகள், எத்தனை யுத்தங்கள், எத்தனை விதமான இன்னல்கள். தாங்கினோம், வாங்கினோம், நிமிர்ந்தோம், இன்று எழுந்து நிற்கிறோம்!

போராட்டம் என்கிற நீரோட்டத்தால் தான் தேசத்தின் நந்தவனம் பூத்துக்குலுங்குகிறது. அதன் தேரோட்டம் இப்போது திக்கெட்டும்….!

மின்மினிப் பூச்சியை தீப்பெட்டிக்குள் சிறைப்பிடிக்கும் சிறுப்பிள்ளைத்தனம் – தோட்டாக்களின் களவாடலில் துப்பாக்கியுடன் நிராயுதபாணியாய் இருக்க உண்டாகிற துர்ப்பாக்கியத்தனம் – கண்களை கட்டிவிட்டு உலகம் இருட்டு என்பதாய் போதிக்கும் அதிமேதாவித்தனம் –

தனங்களை சீர்ப்படுத்தவும், தழைகளை களையெடுக்கவும் வேண்டிய பூமி “சுதந்திரம்” என்பதை சத்தமாய் உச்சரித்தது!

சிறகு வெட்டி பறக்க விடுவதா சுதந்திரம்….
ஜன்னல் சாத்தி இருட்டுக் கொடுப்பதா சுதந்திரம் ….

இதோ சமுதாயம் தன் சிந்தனைகளை இப்படி கரும்பலகையில் எழுத துடிக்கிறது.

கப்பலை மிதக்கவிட்டு கலவரப்படுத்திய சகோதரர்கள் வாழ்ந்த தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

கப்பல் கட்ட துணியாது கயத்தாறில் கர்ஜித்த கம்பீர மனிதன் சுவாசித்த பூமியில் சுவாசித்து கொண்டிருக்கிறோம்….

ஒவ்வொரு வார்த்தையையும் அணுகுண்டுகளாக்கி சமூகம் தன் இதய துடிப்பாக்கிய அந்த எட்டையப்புர கவிதைக்காரன் நடந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

தேசத்தின் எல்லா விலா எலும்புகளும் கெம்புகோல்களாகி இருந்த காலங்களில்ர கண்ணியம், பண்பாடு,. கலாச்சாரம் பேணிய அடையாத்துக்குரிய சமூகம் நம் அனைவரின் சொத்து!

நிறங்களால் அந்நியப்படாத கொடி நம்முடையது. மனங்களால் அந்நியப்படாத சின்னம் நம்முடையது. தாமரைக்குளங்களிலும், புலிகள் சரணாலயங்களிலும், ஆலமர விழுதுகளிலும் வீசிவிட்டு தான் நம் காளரம் நுழைகிறது நம் தேசத்தின் காற்று!

முதல் முறையாய் வேர்க்கிற காற்றுக்கு விசிறி வீசுகிற பாக்கியம்…..

முதல்முறையாக தூசுதுடைத்து இருந்ததாக சொல்லிக்கொள்கிற வரலாறு நம் பாக்கியம்!....

எல்லா நதிகளிலும் நனைந்து எழுந்து ஈரம் சொட்ட வரவே பிரியம் காட்டும் நம் சங்கீதம்!

உலக வரைப்படத்தில் “இந்தியா” – எழுதப்பட்ட வாக்கியத்தை விட எழுந்து நிற்கி வாக்கியமாய் இன்று பார்க்கப்படுவது யாரால் ?

எத்தனை சாதனைகள், எத்தனை கண்டுபிடிப்புகள், எத்தனை பங்களிப்புகள் – உலகம் உற்று பார்க்கிறது. அதன் பறவைப்பார்வையில் நம்தேசம் இன்னும இன்னும் பிரமாண்டமாய்…..

ஒவ்வொரு சுதந்திர தினமும் ஏதோ “நாட்காட்டியின் அடையாளம் ” என்பதைவிட நம் இதயத்துடிப்பின் அடையாளம் என்பதாகவே சொல்லவேண்டியிருக்கிறது!

1947 ஆகஸ்டு 15க்கு ஒரு கௌரவம்! எதையும் உணர்வுகளால் மட்டுமல்ல இதயங்களாலும் உச்சரிப்பதே நம் தேசத்தின் இயல்பு!

கண்களை மூடிக்கொண்டு பார்க்கிறபோதும் பார்வைகள் விஸ்தாரமாகவே தெரிகிறது.

நமக்காக பார்க்கிறது நம் தேசம்!
தேசத்திற்காக வாழ்கிறோம் நாம்!
நேசமாய் சொல்வோமா – வாழ்க நம் தேசம்!

(SAIMIRA 24.7 இணைய வானொலியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட உரைச்சித்திரத்தின் எழுத்து வடிவம்).
*கொஞ்சம் காதுகொடுக்கலாமே பகுதியை கிளிக்கினால் கேட்க்கலாம்

கொஞ்சம் வாசிக்காலாமே.....!

எனது நண்பர் திரு.பாக்கியம்
சங்கர் இந்த வார ஆனந்த விகடனில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார் ...
இதோ அந்த கவிதை........

கொஞ்சம் பார்க்கலாமே........

மனிதர்கள் தான் கம்பிகளுக்கு பின் இருக்க வேண்டுமா......நாங்கள் இருந்தால்???????????????

எங்கள் வீட்டு சுட்டிகளின் வாகனம் உங்களை எங்கு இட்டு செல்கிறது??????????????????
எல்லா மகிழ்ச்சிக்குள்ளும் நீங்களும் இருக்கலாம்.......

கதவு திறக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்காகவும்.....


எத்தனை முறை கதவு திறக்கப்படுகிறது -
எத்தனை முறை அழைக்கப்படுகிறோம் என்பதில் இருந்து தொடங்கி விடுகிறது படைப்புக்கான களம்.
மாட்டின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மணியின் ஒலியில் ஆரம்பித்து, கரி படிந்து இருட்டை ஓட்டிக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டுச் சிம்னி விளக்கு வரை முடிந்திருக்கிற ஒரு பகல் என்னை மெல்லச் சாப்பிடத் தொடங்கியிருந்ததை மறுப்பதற்கில்லை.
நிறைவான விஷயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்தாமையால் குறைவான செய்திகளை மட்டுமே பேசிவிட்டு அமர்ந்துவிடுகிறோம். இல்லை அமர வைக்கப்படுகிறோம். என்னையும் எனக்குள் நிகழ்பவற்றையும் அடக்க அரும்பாடுபட வேண்டியிருக்கிறது. சிலநேரம் அடங்கிவிடுகிறேன்.
பலநேரம், அடக்கப்பட்டு விடுகிறேன்.அப்படி அடங்கிவிட்ட கர்வத்தில் காலரை இழுத்து விட்டபடி நடக்கிற போது லேசான சுயபச்சாதாபங்களைப் பெறவேண்டி எட்டிப் பார்க்கும் படைப்பாக ஆகிவிடுமோ என்கிற பிரக்ஞையில் எழுத மறுத்ததும், எப்போதாவது எழுதத் துடித்ததும் படைப்பாளன் என்கிற மாய வலையை எனக்குள் ஏற்படுத்தவில்லை என்பதை நண்பர்கள் வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அது ஒருவித ஆறுதல். அந்த ஆறுதலைக்கூட ரகசியமாய் அனுபவிக்கிற அனுபவம்தான்.
ஒவ்வொரு நீராட்டலும் திவலைகளாய் உருட்டிச்சென்று கழுவிவிடுகின்றன எல்லாவற்றையும் முதல் குளியல் ஆரம்பித்து வைத்த சில்லிப்பு இன்றும் தொடர்கிறது என்றால் ஒருவித மயக்கம் கலந்த உணர்வுதான் வந்து போகிறது.
கவிதை, சிறுகதை, நாவல் - இப்படி எழுத்தின் வடிவங்களில் எழுதிப்பார்க்க ஆரம்பித்ததன் விளைவு படைப்பாளி என்று சொல்லிக்கொள் என்கிறது. இருந்தாலும், படைப்பாளிகளின் சுதந்திரம் வாசிப்பாளனின் கையில் இருக்கிறது என்பதும், வாசிப்பாளனின் எல்லை படைப்பாளனின் படைப்பால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதும் என்னைப் பெண்மூலமாக்கிப் பார்க்கிறது என்பது நிஜம்!
"காதல் திருடா" திரைப்படமும் திரைத்துறையில் பாடலாசிரியராக வெளி தெரிந்திருந்தாலும் இன்னும் கனமான படைப்பை எழுதவில்லை என்கிற ஏக்கம் இருக்கிற இந்தத் தருணத்தில் இந்தத் தொகுப்பு.
வானொலி, தொலைக்காட்சி, ஊடகத்துறையில் தயாரிப்பாளராக, அறிவிப்பாளராக, இயக்குநராக, தொகுப்பாளராக, பணிபுரிந்தாலும் பத்தாண்டுகளுககும் மேலான ஏக்கம் தீராத ஒட்டகப் பயணமாய் நீளவே செய்கிறது.
முதுகுகாட்டி குளிக்கும் கிராமத்துப் பெண்ணும், கண்ணாடி பார்த்துப் பல் துலக்கும் பட்டணத்து யுவதியும் நிறைந்த உலகில் நிழல் மிதிக்க அலறி வெற்றுப்பாதத்துடன் நடக்கிற எப்போதுமே பாவமாய் பார்க்கிற எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்லவே பிரியப்படுகிறேன்!
கறுப்பு வெள்ளையில் தீட்டப்பட்ட எந்த ஓவியமும் வண்ணங்களில் நனையாத கொடுமையை வெளிப்படுத்துகிறது என்று சொல்வதில்லை. கறுப்பும், வெள்ளையும் வண்ணங்களாக அங்கீகரிக்க படைப்புகளை நேர்மையாய்ப் பார்க்கிற மனோபாவம் வரும்! வரலாம்!
முன்னெடுத்துச் செல்கிற எதையும் நிறுததி விசாரிக்கிறவர்களிடம் கொஞ்சம் மௌனமாய் விசாரியுங்கள் என்கிறேன். பேசினால் ஒருவேளை உங்கள் மௌனம் அர்த்தமாகக் கூடும். ஜன்னல்கள் சாத்தியோ, கதவடைத்தோ மறுதலித்தாலும் ஒவ்வொரு முறையும் தன்முயற்சியை என்னில் இருந்தே ஆரம்பிக்கிறது எழுத்து வேதாளம்.பூச்சாண்டியைக் காட்டி சோறூட்டும் நிலைமையில் இப்போது நான்!
(எனது கவிதை தொகுப்பான "சயனகிளைகளில் கீழிறங்கும் வனம்" தொகுப்பின் என்னுரையில் இருந்து)

மழை விட்ட பிறகும்......





சந்திப்புகள் பலவிதங்களில் நிகழ்கின்றன. எந்த சந்திப்பிலும் மனம் ஒன்றிவிடுவதில்லை. இருந்தாலும் சில சந்திப்புகளை மனம் அசைபோடவே செய்கிறது.

ஒருவரை நீண்ட நாட்களுக்கு பிறகு எதிர்பாராமல் சந்தித்து விடுகிறோம். அந்த அபூர்வ தருணம் மண்வாசனையை போல் மனதில் வீசும்.காலிங் பெல்சத்தம், செல்போன் சிணுங்கல், கதவு தட்டும் ஓசை இப்படி எந்த வடிவத்தில் வரும் அழைப்புகள்....தெரியாத ஒன்றாகவே இருக்கின்றன. இருந்தும் சந்திப்பின் இனிமை சுகம்.

சிறைச்சாலைகளில்சந்திக்க வரும் உறவுகள்,நண்பர்கள் எல்லோரும் சோகம் சுமந்தாலும் எதோ ஒன்றில் விட்டத்தை பெரிதாக்கவே செய்கின்றனர் என்பதை சொல்லவேண்டியதில்லை.

பழகிய இடம், பேசிய வார்த்தைகள்,பார்த்த காட்சிகள் எல்லாமும் கம்பிகளுக்கு பின்னால் சடுகுடு ஆடலாம்.......உங்களுக்கு எப்படியோ என்னால் இப்படித்தான் இருக்க முடியும் என்பதை சொல்லாத சிலரின் அவதானிப்புகள் கேள்விக்கேட்க்கலாம். " எல்லா சந்திப்புகளும் சுகமா சோகமா என்று" ??????

என்னையும் உன்னையும் சந்திக்க வைத்த அந்த தருணத்தை என்ன வென்று சொல்வது-இப்படி கேள்வி கேட்க காதலும் ஒரு காரணம் அவ்வளவுதான்.
ஓராண்டுக்கு பிறகு இன்று ஷார்ஜாவில் இருந்து ஜியாவுதீன் குடும்பத்தினர் வந்திருந்தனர். UAE யில் உங்கள் சக்தி 94.7 பண்பலை வானொலியில் பணியில் இருந்தபோது நேயராக எனக்கு அறிமுகமான குடும்பம் இன்று சென்னைக்கு அதுவும் எனது அலுவலகத்திற்கு வந்தனர். மனது முழுக்க மகிழ்ச்சியுடன் அவர்களின் வருகை என்னை உற்சாக படுத்தியது.....வெளியே லேசான மழை....எனக்குள் இதமான அன்பின் மண் வாசனையை நுகரமுடிந்தது.

வானொலியில் இப்போதெல்லாம் உங்களை போல் நிகழ்ச்சி யாரும் வழங்குவதில்லை UAE யை விட்டு நீங்கள் வந்த பிறகு ஒரு பெரும் இழப்பை எங்களால் உணரமுடிகிறது எனபதாக ஜியாவுதீன் பேசியது சந்திப்பின் அவசியத்தை விட அந்த தருணத்தின் சந்தோசம் என்னை வெகுவாக கவர்வதாக இருந்தது.

நம்மை சந்திக்க வரும் நமது நண்பர்களாகட்டும், மற்றவர்களாகட்டும் சில இழப்புகளை பற்றியோ இல்லை பெற்றவைகளை பற்றியோ பேசுவது சம்பிரதாயமாக அமைந்து விடுகிறது என்பதை சொல்லமால் இருக்க முடிவதில்லை.இன்னுமிரண்டு நாளில் ஷார்ஜா செல்லவிருப்பதாக சொன்னார். சக்தியில் வேலையில் இருந்த போது இருந்த என் நினைவுகளை இந்த சந்திப்பு மீட்டு எடுப்பதாகவே பட்டது.

ரயில் சிநேகம் கூட சில நேரம் அபூர்வ விசயங்களை பரிமாறுவதாக அமைந்து விடலாம். பிறகு அந்த சந்திப்பின் தொடர்ச்சியை மனம் எதிர் பார்க்கவே செய்யும்...மழை விட்ட பிறகும் இலைகளின் வழியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கிறதே அது போல.......

இயலாமை மீது கல் எறிகிறேன்......

பொதுவா எல்லோருக்கும் கோபம் வரும். சில கோபம் நியாயம், சில கோபம் ...கேள்விக்குறி...... என்னை பொறுத்த வரை கோபம் ஒரு சாத்தான். ஆனால், அது ஒரு தேவதையாக உருமாறுவதும் தவிர்ப்பதற்கில்லை. கோபம் வந்தால் வெளிப்படுத்துவது இடம் பொருள் ஏவல் குறித்தான விஷயங்களை பொறுத்தது. சில கோபம் இயலாமையால் கல் எறியப்படுவது சங்கடம்...

உங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் நிகழ்திருக்கிறதா என்று நண்பர் ஒருநாள் தொலைபேசியில் அழைத்து கேட்டார். கொஞ்சம் யோசனைக்கு பிறகு "ஆமாம் எப்போதாவது..." என்பதாக சொன்னதும் அவர் இப்படி தான் சொன்னார், " கோபம் உங்களையும் விட்டு வைக்கல போல" ......என்றார். நான் அலட்டிக்காமல் விட்டு வைக்க நான் ஒன்னும் விரோதி இல்லையே.....என்றதும் கோபமாகிவிட்டார்.

நான் மெது வாக சொன்னேன்... தோழா எனக்கும் தார்மீகமான கோபங்கள் வரும் ஆனால் சிலதை நானே அங்கிகரிப்பேன் சிலதை சிறை சேதம் செய்வேன் பலதை என் இயலாமை கல் எறிந்து துடிக்கவிடும். இருந்தாலும் கோபம் வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.....வீட்டில், அலுவலகத்தில் இப்படி பொது இடங்களில் ஏற்ப்படும் கோபம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சுமந்து வெளிபட்டாலும் பொதுநலன் கருதி வருகிறபோது சில கௌரவிக்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இப்படி தான், என் கோபங்கள் என் இயலாமையை சுட்டிய போது வெட்க்கப்பட வேண்டி உள்ளது. தள்ளி நிறுத்திய பேருந்து நடத்துனரிடம் தொடங்கும் கோபம் சக பயணிகளை சீண்டும் அல்லது நம் மேல் அனுதாபத்தை பெற செய்யும் .....பேருந்து நிறுத்தம் பக்கத்தில் மழை தண்ணீர் தேங்கி நிக்கிறது. எல்லோரும் தள்ளி நிற்கின்றனர். நேரம் சென்று கொண்டிருக்க செல்ல வேண்டிய பேருந்து எதிர்பார்த்து நிற்கிறேன். வண்டி வருகிறது முன்னாள் இன்னொரு வண்டி நிற்க வசதி இல்லாத நான் போக வேண்டிய பேருந்து சாலையின் மத்தியில் நிற்க ஓடி ஏற முடியாத நிலை. தொடர்ச்சியாக பின்தொடரும் வண்டிகள். என்னை போல் எல்லோரும் வண்டியை பார்க்க வண்டி எங்களுக்கு டாட்டா சொல்லிக்கொண்டு சென்று விட்டது. அங்கே போக்குவரத்து காவலர் நிற்கிறார்...அவர் இருந்தே இப்படி .....கோபம் என்ன செய்ய...."சார் நீங்க இருக்கும் போதே இப்படி கொஞ்சம் நிப்பாட்ட கூடாதா... " கேட்டதும் தாமதம் ஓடி போய் ஏறக்கூடாதா பேசிக்கிட்டு நிக்கறீங்க என்றாரே பார்க்கணும்....கோபம் ஒருப்பக்கம் வண்டியை தவற விட்ட இயலாமை மறுபக்கம் நல்லவேளையாக இன்னொரு வண்டி வர ஏற செல்கிறேன் அந்த காவலர் அந்த பெருநதி நடத்துனரிடம் "சார் ரொம்ப கோபமா இருக்கார் " என்றதும் என்ன "சார் எது ஆபீஸ் போற நேரத்துல டென்ஷன்" ...நான் என்ன சொல்ல நடந்தது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றாலும் அவரின் கல் எறிதல் என் இயலாமை மீது என்று உணர்வே நிரம்ப நேரம் தேவை படுகிறது எனக்கு....

கோபம் தேவதைகளை சாத்தான்கள் ஆக்கும். கோபம் இல்லாத தருணங்களை சேகரிப்போமா.......

இருப்பும் இறப்பும்........



அலுவலகம் நுழைந்ததும் ரகுவரன் இருந்துவிட்டார் தெரியுமா என்று நண்பர் சிவசங்கரன் சொன்னதும் ஒரு கணம் அதிர்ந்தேன். எப்போது எப்படி பல கேள்விகள் மனதை பிராண்ட லேசாக நனைந்த ஆடாகினேன். ஒரு நல்ல நடிகர். கைநாட்டு-திரைப் படத்தில் ஒலிக்கும் மழை வருது மழை வருது குடை கொண்டு வா பாடலை கேட்க்கிற போதெல்லாம் இனி ரகுவரன் இல்லை என்கிற வெற்றிடம் மனதை வதைக்கும் என்பதை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடியாது. சமீபகாலமாக பிரபலங்கள் மரணம் அடைகிற செய்திகள் கொஞ்சம் அதிர்ச்சியை உண்டுபண்ணவே செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இருக்கிற போது மனிதன் எல்லாமுமான ஒன்றாக இருந்து விட்டு இறந்து போகிறபோது ஏதும் அற்றவனாக போகிறான் என்பதை உணர்கிறபோது விட்டுபோக ஏதோ ஒன்று தேவை இல்லையேல், இருந்ததற்கான அடையாளம் விதைக்காமல் வாழ்வது வீண் என்பதாகவே யோசிக்க முடிகிறது.

ரகுவரன் என்கிற மனிதன் திரைப்படங்களில் தோன்றாமல் இருந்திருந்தால், தன்னுடைய இருப்பை சரியாக செய்யாத மனிதனாக அவர் வாழ்ந்திருந்தால் இந்த அளவு ஏதோ நம்முடன் பழகிய ஒரு சக நண்பனை போல் பாவிக்க முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் தன்னுடைய வாழ்க்கையை சரியாக அமைக்க தவறி இருந்தாலும் ஒரு கலைஞனாய் தன் பங்களிப்பை சரியாகவே செய்திருக்கிறார் ரகுவரன்.

கலைஞர்கள் எல்லோருக்கும் வாழ்க்கை வெற்றியை விட கலையில் கிடைக்கும் வெற்றியே பெரிது என்று வாழ்த்துவிடுகிறார்களோ என்பதாகவே யோசிக்க முற்படுகிறேன். ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு பலரை உதாரணப்படுத்தலாம். அதுபோல், ஒரு கலைஞன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் சிலரை சுட்டியும் காட்டலாம். ஆனால், ரகுவரன் வாழ்ந்த அடையாளம்.

வில்லத்தனமான நடிகர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஐ நோ இப்படி பேசும் போதே அது ரகுவரன் என்பதை புரிந்து கொள்ளும் படி தன் நடிப்பை விதைத்து விட்டு போய் இருக்கிறார். இருக்கும் போது மனிதன். இல்லாமல் இருக்கும் போது இறைவன். ஒன்றில் இருந்து ஒன்று தொடர்ந்து போவதே வாழ்க்கை.......



அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

வாழ்த்துகளும் வார்த்தைகளும்........



ஒவ்வொரு நாளும் பிறந்த நாளாக இருக்கவே நினைக்கிற மனசு குழந்தையாகி விடுகிறது எல்லோருக்கும். நேற்றைய நாளும், இன்றைய நாளும், பெரிய வித்தியாசத்தை உண்டு பண்ணா விட்டாலும் வகை படுத்தும் சந்தோசத்தில் திளைக்கிறது எல்லோருக்குமான மனசு. ஒருவகையில் பிறந்த நாள் கூட அவசியமான பொழுதாகவே அவதானிக்க படுகிறது.



வாழ்த்துகளை பகிர்கிற எந்த ஒன்றிலும் நமக்கான வாழ்க்கை கண்சிமிட்டு கிறது. நாமோ, மற்றவரோ பிறந்த நாளை பிரதான படுத்துகிற போது காற்றுக்கு கூட லேசாக வெட்க்கம் வரலாம். காலண்டர் தாள்களாய் கிழிக்கப்படுகிற ஒவ்வொரு நொடியும் புணரமைக்க படுகிறது என்பதான நிகழ் எடுபடுவதில்லை எப்போதும்.


குடும்பத்தில் இருப்பவருகோ, நண்பர்களுக்கோ, பிரபலமானவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறபோது ஒருவர் அடுத்த வாழ்த்தை பத்திர படுத்துகிறார் என்பதாவே சொல்லிக்கொள்ள வேண்டும். ஏனெனில் வாழ்த்துகளுக்கு கால்களும் உண்டு காதுகளும் உண்டு. கேட்கும் பல நேரம் பேசும்.......
எனக்கான வாழ்த்துகள் எப்போதும் ஈரம் தடவியே வந்திருக்கிறது. அது போல் தான் என்னால் சொல்லப் படுகிற வாழ்த்துகளும் நேசம் பூசியே சொல்லப்படுகிறது. இப்போதெல்லாம், வாழ்த்துகளை காசுகொடுத்து சொல்லிகொள்ளவோ, இல்லை தவணை முறையில் சொல்லி கொள்ளவோ தான் அவரசபடுத்துகிறது எல்லோருக்குமான எதார்த்த வாழ்க்கை.
சிரமம் இல்லாத ஒன்று வாழ்த்துவது. எல்லா வார்த்தைகளும் அணிவகுக்கும். என்னை எடுத்துகொள், என்னை எடுத்துகொள் என்று அழகுக்காட்டும். சில நேரம் நம்மை நனைத்து ஜன்னல் திறக்கலாம் வாழ்த்துகள். எப்படியோ மாற்ற வாழ்த்துகளை விட பிறந்த நாள் வாழ்த்துகள் சிறப்பானவை. இன்று புதியதாய் பிறந்தோம் என்பது எல்லா நாளும் முடியா விட்டாலும் பிறந்த நாளில் மட்டுமாவது பரிசீலிக்க படுகிறது என்பதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்.

வாழ்த்துகளை சொல்கிறபோது மனிதன் மரியாதைக்குரியவனாகிறான். கைக்குலுக்கி கொள்கிற ஒவ்வொரு மனிதனும் அடையாளப்படுதப்படுகிறான். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி அதே வாழ்த்தை பெறுகிற எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதுதான் இப்போதைய கணிப்பாக இருக்கிறது.....

குடைகளும் சில துளிகளும்.....




நேற்று இரவு நல்ல மழை.....நள்ளிரவை தாண்டிய பொழுதில் உறக்கம் கலைத்தது . ஒரு செல்ல பிராணியை போல் அது தன் வாலாட்டலை என்னிடம் இருந்து தொடங்குகிறதோ என்பதாய் தோன்ற விழிப்பு வந்தது. உள்ளறையில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். சடசடவென்ற அதன் அழைத்தலில் என்னை மறந்து ஜன்னல் திறக்க வெளியே பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது அது.



இன்னும் கோடை தொடங்காத ஒரு இரவு, மழையில் நன்றாகவே நனைந்து கொண்டிருந்து. உள்ளுக்குள் இது பகலாக இருக்க கூடாதா என்று லேசான எண்ணம் சுழன்றடித்தது என்றால் அது பொய் என்று சொல்ல முடியாது.

குடைகள் தேவை படலாம். காலையில் அவகாசம் இருக்காது. இது நாள் வரை அவசியம் என்பதாக அது பார்க்க படவில்லை. தேவை என்பது ஒன்றின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிப்பது. மனைவியை எழுப்பினேன். அவளின் சிணுங்கல் வெளியே மழை பெய்கிறது என்பதான என் தகவலில் அதிராதவளாகவே தெரிந்தாள். குடை குறித்தான என் சிந்தனை காகித கப்பலாக மிதக்க அரம்பித்த்திருந்தது.


எவ்வளவு முறை குடை மறந்து வந்திருக்கிறேன் என்கிற கணக்கெடுப்பு என்னை முகத்தில் அறையும் சாரலானதில் தூக்கம் தொலைத்தேன் . இரண்டு முறை மின்சாரம் துண்டிக்க பட்டதும், பிள்ளைகள் மின்விசிறியை போட சொல்லி நச்சரித்ததும் கொடுமை.


மழையின் இனிமை, யாரும் பார்க்காமல் போன ஒரு பௌர்ணமி இராத்திரியாய் இருந்ததில் யாருக்கும் வருத்தமோ இல்லை கவலையோ இல்லை என்பதாவே பொழுது விடிந்தது.







சாலையில் நேற்றைய மழையின் மிச்சமும், என் முதல் நாவல் "வேர்" தொடக்கத்திலும் மழை என்னை நனைத்திருந்து. பக்கங்கள் ஈரமான உணர்வை அவ்வப்போது வெளிப்படுத்தவே செய்கின்றன என்பதை குடைகள் கொண்டு தான் தீர்மானிக்க முடிகிறது. இருந்தாலும் மழை சுத்தமாய் பங்குனி மாத தொடக்கத்தில் எட்டிப்பார்த்தது சூரியனுக்கு ஐஸ் வைப்பதாவே இருந்தது. ஒருவேளை நமக்கு வைத்தோ என்னவோ????????????எந்த ஜன்னல் கம்பிகளிலும் உலராத ஈரம் மிச்சம் இருந்ததை மறுப்பதற்கில்லை.


இதுவரை நான் ........

வணக்கங்களுடன்......

மறுபடியும் உங்களை சந்திக்கிறேன் ....நலமா....சென்னையில் அப்படி ஒன்றும் சிறப்பாக இன்று நிகழவில்லை. இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான விசயங்களை பொத்தி வைத்தபடி செல்கிறது....இங்கே சில நிகழ்வுகள் எனக்கானதாய் அமைவதை பார்க்கிற போது மகிழ்வாழ் உள்ளது ......இந்த மடலில் எனது புத்தக வரிசையை இட்டு நிரப்பி இருக்கிறேன். இனிமேல் தான் சரியான பதிவை மேற்கொள்ளவேண்டும் .......

நானும் எனது நூல்களும்:

1. தீக்குச்சி விரல்கள் - கவிதை தொகுப்பு 1998

2. என்வீடும் ஒரு குருவிக்கூடும் - கவிதை தொகுப்பு 2000

3. மேற்கு கோபுர வாசல் வழியே - சிறுகதை தொகுப்பு 2000

4. வேர் - நாவல் 2002

5. வண்ணத்து பூச்சிக்கு வண்ணங்கள் தேவையில்லை - நாவல் 2003

6.இருப்பிடம் - நாவல் 2007

7. வடபழனி முதல் பட்டினபக்கம் வரை - காதல் கவிதைகள் 2008

8. சயனகிளைகளில் கீழிறங்கும் வனம்- கவிதைகள் 2008

நலன்கள் சூழ .....

ஆர்.நாகப்பன்.

பேசுகிறேன்......


அன்பான தோழமைக்கு,
மனம் விட்டு பேச பிரியம்...... நேசம் தடவும் மயில் இறகாக வந்து போகும் தினங்களில் வண்ணத்து பூச்சிகளாய் வாழ்க்கை கண்சிமிட்டும். பிரபலமானவர்களையும் சாதாரணம் ஆக்கும்; சாதாரணமானவர்களையும் பிரபலம் ஆக்கும்...என்ன அது?????????????
யோசிப்போம் கொஞ்சமாய் மௌனம் பூசி...........
அன்புடன்,

ஆர்.நாகப்பன்.

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Blog Archive

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain