கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

இருப்பும் இறப்பும்........



அலுவலகம் நுழைந்ததும் ரகுவரன் இருந்துவிட்டார் தெரியுமா என்று நண்பர் சிவசங்கரன் சொன்னதும் ஒரு கணம் அதிர்ந்தேன். எப்போது எப்படி பல கேள்விகள் மனதை பிராண்ட லேசாக நனைந்த ஆடாகினேன். ஒரு நல்ல நடிகர். கைநாட்டு-திரைப் படத்தில் ஒலிக்கும் மழை வருது மழை வருது குடை கொண்டு வா பாடலை கேட்க்கிற போதெல்லாம் இனி ரகுவரன் இல்லை என்கிற வெற்றிடம் மனதை வதைக்கும் என்பதை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடியாது. சமீபகாலமாக பிரபலங்கள் மரணம் அடைகிற செய்திகள் கொஞ்சம் அதிர்ச்சியை உண்டுபண்ணவே செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இருக்கிற போது மனிதன் எல்லாமுமான ஒன்றாக இருந்து விட்டு இறந்து போகிறபோது ஏதும் அற்றவனாக போகிறான் என்பதை உணர்கிறபோது விட்டுபோக ஏதோ ஒன்று தேவை இல்லையேல், இருந்ததற்கான அடையாளம் விதைக்காமல் வாழ்வது வீண் என்பதாகவே யோசிக்க முடிகிறது.

ரகுவரன் என்கிற மனிதன் திரைப்படங்களில் தோன்றாமல் இருந்திருந்தால், தன்னுடைய இருப்பை சரியாக செய்யாத மனிதனாக அவர் வாழ்ந்திருந்தால் இந்த அளவு ஏதோ நம்முடன் பழகிய ஒரு சக நண்பனை போல் பாவிக்க முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் தன்னுடைய வாழ்க்கையை சரியாக அமைக்க தவறி இருந்தாலும் ஒரு கலைஞனாய் தன் பங்களிப்பை சரியாகவே செய்திருக்கிறார் ரகுவரன்.

கலைஞர்கள் எல்லோருக்கும் வாழ்க்கை வெற்றியை விட கலையில் கிடைக்கும் வெற்றியே பெரிது என்று வாழ்த்துவிடுகிறார்களோ என்பதாகவே யோசிக்க முற்படுகிறேன். ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு பலரை உதாரணப்படுத்தலாம். அதுபோல், ஒரு கலைஞன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் சிலரை சுட்டியும் காட்டலாம். ஆனால், ரகுவரன் வாழ்ந்த அடையாளம்.

வில்லத்தனமான நடிகர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஐ நோ இப்படி பேசும் போதே அது ரகுவரன் என்பதை புரிந்து கொள்ளும் படி தன் நடிப்பை விதைத்து விட்டு போய் இருக்கிறார். இருக்கும் போது மனிதன். இல்லாமல் இருக்கும் போது இறைவன். ஒன்றில் இருந்து ஒன்று தொடர்ந்து போவதே வாழ்க்கை.......



அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

வாழ்த்துகளும் வார்த்தைகளும்........



ஒவ்வொரு நாளும் பிறந்த நாளாக இருக்கவே நினைக்கிற மனசு குழந்தையாகி விடுகிறது எல்லோருக்கும். நேற்றைய நாளும், இன்றைய நாளும், பெரிய வித்தியாசத்தை உண்டு பண்ணா விட்டாலும் வகை படுத்தும் சந்தோசத்தில் திளைக்கிறது எல்லோருக்குமான மனசு. ஒருவகையில் பிறந்த நாள் கூட அவசியமான பொழுதாகவே அவதானிக்க படுகிறது.



வாழ்த்துகளை பகிர்கிற எந்த ஒன்றிலும் நமக்கான வாழ்க்கை கண்சிமிட்டு கிறது. நாமோ, மற்றவரோ பிறந்த நாளை பிரதான படுத்துகிற போது காற்றுக்கு கூட லேசாக வெட்க்கம் வரலாம். காலண்டர் தாள்களாய் கிழிக்கப்படுகிற ஒவ்வொரு நொடியும் புணரமைக்க படுகிறது என்பதான நிகழ் எடுபடுவதில்லை எப்போதும்.


குடும்பத்தில் இருப்பவருகோ, நண்பர்களுக்கோ, பிரபலமானவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறபோது ஒருவர் அடுத்த வாழ்த்தை பத்திர படுத்துகிறார் என்பதாவே சொல்லிக்கொள்ள வேண்டும். ஏனெனில் வாழ்த்துகளுக்கு கால்களும் உண்டு காதுகளும் உண்டு. கேட்கும் பல நேரம் பேசும்.......
எனக்கான வாழ்த்துகள் எப்போதும் ஈரம் தடவியே வந்திருக்கிறது. அது போல் தான் என்னால் சொல்லப் படுகிற வாழ்த்துகளும் நேசம் பூசியே சொல்லப்படுகிறது. இப்போதெல்லாம், வாழ்த்துகளை காசுகொடுத்து சொல்லிகொள்ளவோ, இல்லை தவணை முறையில் சொல்லி கொள்ளவோ தான் அவரசபடுத்துகிறது எல்லோருக்குமான எதார்த்த வாழ்க்கை.
சிரமம் இல்லாத ஒன்று வாழ்த்துவது. எல்லா வார்த்தைகளும் அணிவகுக்கும். என்னை எடுத்துகொள், என்னை எடுத்துகொள் என்று அழகுக்காட்டும். சில நேரம் நம்மை நனைத்து ஜன்னல் திறக்கலாம் வாழ்த்துகள். எப்படியோ மாற்ற வாழ்த்துகளை விட பிறந்த நாள் வாழ்த்துகள் சிறப்பானவை. இன்று புதியதாய் பிறந்தோம் என்பது எல்லா நாளும் முடியா விட்டாலும் பிறந்த நாளில் மட்டுமாவது பரிசீலிக்க படுகிறது என்பதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்.

வாழ்த்துகளை சொல்கிறபோது மனிதன் மரியாதைக்குரியவனாகிறான். கைக்குலுக்கி கொள்கிற ஒவ்வொரு மனிதனும் அடையாளப்படுதப்படுகிறான். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி அதே வாழ்த்தை பெறுகிற எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதுதான் இப்போதைய கணிப்பாக இருக்கிறது.....

குடைகளும் சில துளிகளும்.....




நேற்று இரவு நல்ல மழை.....நள்ளிரவை தாண்டிய பொழுதில் உறக்கம் கலைத்தது . ஒரு செல்ல பிராணியை போல் அது தன் வாலாட்டலை என்னிடம் இருந்து தொடங்குகிறதோ என்பதாய் தோன்ற விழிப்பு வந்தது. உள்ளறையில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். சடசடவென்ற அதன் அழைத்தலில் என்னை மறந்து ஜன்னல் திறக்க வெளியே பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது அது.



இன்னும் கோடை தொடங்காத ஒரு இரவு, மழையில் நன்றாகவே நனைந்து கொண்டிருந்து. உள்ளுக்குள் இது பகலாக இருக்க கூடாதா என்று லேசான எண்ணம் சுழன்றடித்தது என்றால் அது பொய் என்று சொல்ல முடியாது.

குடைகள் தேவை படலாம். காலையில் அவகாசம் இருக்காது. இது நாள் வரை அவசியம் என்பதாக அது பார்க்க படவில்லை. தேவை என்பது ஒன்றின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிப்பது. மனைவியை எழுப்பினேன். அவளின் சிணுங்கல் வெளியே மழை பெய்கிறது என்பதான என் தகவலில் அதிராதவளாகவே தெரிந்தாள். குடை குறித்தான என் சிந்தனை காகித கப்பலாக மிதக்க அரம்பித்த்திருந்தது.


எவ்வளவு முறை குடை மறந்து வந்திருக்கிறேன் என்கிற கணக்கெடுப்பு என்னை முகத்தில் அறையும் சாரலானதில் தூக்கம் தொலைத்தேன் . இரண்டு முறை மின்சாரம் துண்டிக்க பட்டதும், பிள்ளைகள் மின்விசிறியை போட சொல்லி நச்சரித்ததும் கொடுமை.


மழையின் இனிமை, யாரும் பார்க்காமல் போன ஒரு பௌர்ணமி இராத்திரியாய் இருந்ததில் யாருக்கும் வருத்தமோ இல்லை கவலையோ இல்லை என்பதாவே பொழுது விடிந்தது.







சாலையில் நேற்றைய மழையின் மிச்சமும், என் முதல் நாவல் "வேர்" தொடக்கத்திலும் மழை என்னை நனைத்திருந்து. பக்கங்கள் ஈரமான உணர்வை அவ்வப்போது வெளிப்படுத்தவே செய்கின்றன என்பதை குடைகள் கொண்டு தான் தீர்மானிக்க முடிகிறது. இருந்தாலும் மழை சுத்தமாய் பங்குனி மாத தொடக்கத்தில் எட்டிப்பார்த்தது சூரியனுக்கு ஐஸ் வைப்பதாவே இருந்தது. ஒருவேளை நமக்கு வைத்தோ என்னவோ????????????எந்த ஜன்னல் கம்பிகளிலும் உலராத ஈரம் மிச்சம் இருந்ததை மறுப்பதற்கில்லை.


இதுவரை நான் ........

வணக்கங்களுடன்......

மறுபடியும் உங்களை சந்திக்கிறேன் ....நலமா....சென்னையில் அப்படி ஒன்றும் சிறப்பாக இன்று நிகழவில்லை. இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான விசயங்களை பொத்தி வைத்தபடி செல்கிறது....இங்கே சில நிகழ்வுகள் எனக்கானதாய் அமைவதை பார்க்கிற போது மகிழ்வாழ் உள்ளது ......இந்த மடலில் எனது புத்தக வரிசையை இட்டு நிரப்பி இருக்கிறேன். இனிமேல் தான் சரியான பதிவை மேற்கொள்ளவேண்டும் .......

நானும் எனது நூல்களும்:

1. தீக்குச்சி விரல்கள் - கவிதை தொகுப்பு 1998

2. என்வீடும் ஒரு குருவிக்கூடும் - கவிதை தொகுப்பு 2000

3. மேற்கு கோபுர வாசல் வழியே - சிறுகதை தொகுப்பு 2000

4. வேர் - நாவல் 2002

5. வண்ணத்து பூச்சிக்கு வண்ணங்கள் தேவையில்லை - நாவல் 2003

6.இருப்பிடம் - நாவல் 2007

7. வடபழனி முதல் பட்டினபக்கம் வரை - காதல் கவிதைகள் 2008

8. சயனகிளைகளில் கீழிறங்கும் வனம்- கவிதைகள் 2008

நலன்கள் சூழ .....

ஆர்.நாகப்பன்.

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain